வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) தொடர்பில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விசேட விளக்கமளித்துள்ளார்.
இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதிச் செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். அதனால் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்புகளை முகாமை செய்யும் நோக்கில், மூன்று மாத காலத்திற்கு இந்த 50% மேலதிக வரி அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை மூலம் வாகன இறக்குமதி தடை செய்யப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த மூன்று மாத காலப்பகுதியில் யாரேனும் வாகனங்களை இறக்குமதி செய்ய விரும்பினால், அவர்கள் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த மேலதிக வரி மூன்று மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருப்பதால், வாகன இறக்குமதியை தற்காலிகமாக ஒத்திவைக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பும் உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
