இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
பேர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று (16) நடைபெற்றது.
போட்டியில் நாணய வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி புரூக் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா, கில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.
கில் 31 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து ரோகித் சர்மா 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இஷான் 1 ஓட்டம், வொஷிங்டன் சுந்தர் 2 ஓட்டங்கள், அக்சர் படேல் 1 ஓட்டம் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிலைத்து விளையாடி ஓட்டங்களை குவித்தனர். பொறுப்புடன் விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர்.
விராட் கோலி 65 ஓட்டங்களுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் 66 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.இதனால் 44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 233 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் சவாலை சமாளித்து 44.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்துள்ளது.
இதனால், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில் நாளை மறுதினம் (19) இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது இறுதிப் போட்டியுடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடரை கருத்தில் கொண்டு இளைய தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்திய தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இது தொடர்பில் தமது தீர்மானத்தை ரோகித் சர்மாவுக்கும் இந்திய தேர்வுக்குழு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் ரோகித் சர்மாவின் ஓய்வு மற்றும் இறுதிப் போட்டி குறித்து எவ்வித உத்தியோகப்பூர்வ தகவல்களும் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
