ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துக்கு துணைபோனதாகவும், அதற்காகத் துப்பாக்கிகளை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒஸ்மன் குணசேகர எனப்படும் கம்பஹா ஒஸ்மான் என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2025 பெப்ரவரி 19ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி போன்று தோற்றமளித்து வந்த நபரொருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அச்சமயம் அவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தற்போது தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கடந்த 13ஆம் திகதி இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் வைத்து கம்பஹா ஒஸ்மான் என்பவரை கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் இணைந்து இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், குற்றத்தை நிறைவேற்ற தேவையான துப்பாக்கிகளை வழங்கி சந்தேகநபர் உதவியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசின்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
