நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
‘அத தெரண’விடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நீதிமன்ற ஏற்பாடுகள் தொடர்பான திருத்தச் சட்டமூலமும் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு ஆரம்பம் முதலே மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் சர்வதேச அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
எனினும், இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை கடந்த 7ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதும், குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனுடன் இணைந்ததாக, நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலமும் அதே தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணை செய்த பின்னர், உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை 3 முதல் 21 நாட்களுக்குள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.
