லெபனானில் செயற்பட்டு வரும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவை கட்டுப்படுத்தாவிட்டால், ஈரானுக்கு எதிராக மீண்டும் கடுமையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், லெபனானில் உள்ள தங்களின் ஆதரவு குழுக்களின் நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் எட்டப்பட்ட 60 நாள் அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முழுமையான போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான், பாகிஸ்தான், கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், லெபனானில் இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் தாக்குதல்களால் கடந்த 100 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
