நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை என்று அரசு கூறினாலும், உண்மையில் மக்கள் கடுமையான வாழ்க்கைச் சுமையை எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று(21) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், டாலரின் பெறுமதி தொடர்ந்து மாற்றமடைந்து வருவதாகவும், அதனால் இறக்குமதி பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருவதாகவும் கூறினார்.
“காலை இருந்த டாலர் மதிப்பு பிற்பகலில் மாறிவிடுகிறது. HSBC, BOC, NDB போன்ற வங்கிகளில் கூட மாற்று விகிதங்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொரு மணிநேரத்திலும் இரண்டு அல்லது மூன்று ரூபாய் வரை வித்தியாசம் உள்ளது. அரசு நெருக்கடி இல்லை எனச் சொன்னாலும், மக்களின் வாழ்க்கையில் அந்த நெருக்கடி வெளிப்படையாகத் தெரிகிறது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பால் மாவு உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒரு கிலோ பால் மாவின் விலை 3000 ரூபாயை எட்டியுள்ளது. 400 கிராம் பால் மாவின் விலையும் 50 ரூபாயால் உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்து, மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அரசாங்கம் மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையை புரிந்துகொள்ளாமல் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர்,
“குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் மக்களின் துயரத்தை உணர முடியாது. அவர்கள் மக்களிடையே இறங்கி நிலைமையைப் பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், வாகன இறக்குமதி தொடர்பிலும் அவர் விமர்சனம் வெளியிட்டார். மே 16 ஆம் தேதி வரி விதித்து, அதற்கு முன்பாகவே 1500 வாகனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், இது திட்டமிட்ட நடவடிக்கையா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
“அனுரகுமார திசாநாயக்க எப்போதும் கூட்டாளிப் பொருளாதாரத்தை விமர்சித்தார். ஆனால் தற்போது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவது எதிர்காலத்தில் பெரிய சமூக மற்றும் பொருளாதார ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்தார்.
