அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான போர் தற்போது இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், இதுவரை எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படாத நிலையில், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்ற அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் மேற்கொண்டால், தற்போது 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்டுள்ள யுரேனியத்தை, முழுமையான 90 சதவீத அளவிற்கு செறிவூட்டும் நடவடிக்கையை ஈரான் மேற்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஈரான் பாராளுமன்றக் கமிஷனின் செய்தித் தொடர்பாளர், “மற்றொரு தாக்குதல் நடைபெறுமானால், 90 சதவீத யுரேனியம் செறிவூட்டல் என்பது ஈரானின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக இருக்கலாம். இது குறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்படும்” என தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்த எச்சரிக்கை, சர்வதேச அளவில் புதிய பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
