ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளை பரிசீலித்த கோட்டை நீதவான் பசான் அமரசேன, விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரால் நியமிக்கப்படும் 5 பேர் கொண்ட சட்ட மருத்துவ நிபுணர் குழுவின் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், விசாரணை அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கபில சந்திரசேனவின் சடலம், கொள்ளுப்பிட்டி பேட்ரிஸ் மாவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (08) காலை மீட்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிய கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
