Homeஉள்நாடுதொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா கிடைக்கவில்லை: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா கிடைக்கவில்லை: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!

“தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அப்பட்டமான பொய். இந்த சம்பள உயர்வின் நன்மை 50 சதவீதத்துக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ அரசாங்கம் முழு நாட்டிற்கும் பொய் மாயையை உருவாக்கி அதனை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் உண்மையை மூடி மறைக்கின்றது.

எந்தவிதமான அரசியல் தொழிற்சங்க காழ்;புணர்ச்சியும் இல்லாமல் என்னால் சொல்லப்படுகின்ற உண்மையை நியாயமாக சிந்திப்பவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தோட்டங்களில் வேலை செய்கின்றவர்களில் அரை பங்குக்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்கள். இவர்களுக்கே 1550 ரூபாய் அடிப்படை சம்பளமும், வேலை செய்கின்ற நாட்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 200 ரூபாயும் கிடைக்கிறது.

தோட்ட நிர்வாகங்கள் நிரந்தர தொழிலாளர்களாக இருந்தவர்களை நிர்பந்தத்தின் மூலமும் அடக்குமுறை சட்டங்களின் மூலமும் தற்காலிக தொழிலாளராக மாற்றி யிருக்கிறது.

இவ்வாறான தற்காலிக தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களுக்கு சமமான அளவில் உழைப்பை வழங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த சம்பள உயர்வில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

இதே போல தொழிலாளர் பற்றாக்குறை என்பதை காரணம் காட்டி ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களும் நிரந்தர தொழிலாளர்கள் வழங்கும் உழைப்புக்கு சமமான அளவில் உழைப்பை வழங்கி வருகிறார்கள் இவர்களுக்கும் இந்த சம்பள உயர்வின் நன்மை கிட்டவில்லை.

அதேபோல பரிக்கப்படும் தேயிலைக் கொழுந்திற்கு மட்டும் ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இந்த சம்பள உயர்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போதே இதை எப்படி ஒரு சம்பள உயர்வு என ஏற்றுக் கொள்ள முடியும்?

குறைந்தபட்சம் இந்த நாட்டின் பிரஜை என்ற வகையிலும், தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளி என்ற வகையிலும் இவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 200 ரூபாய் கூட கிடைக்கவில்லை என்பது தான் யதார்த்தமான உண்மை.

ஜனாதிபதி அவர்களே நீங்கள் ஒரே ஒரு தோட்டத்துக்கு வாருங்கள் நீங்கள் விரும்புகின்ற ஊடகங்களையும் அழைத்து வாருங்கள். உங்களோடு பொதுவான நடுநிலையாளர்களையும் அழைத்து வாருங்கள் அங்கே வேலை செய்கின்ற தொழிலாளர்கள் அனைவரையும் வரிசைப்படுத்துங்கள்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் அதிகரித்துக் கொடுத்த சம்பளம் கிடைக்கின்றதா என்பதை கேளுங்கள். அதை அப்படியே பகிரங்கப்படுத்தினால் வழங்கப்பட்டுள்ளது சம்பள உயர்வா? என்பது நாட்டிற்கும் உலகத்துக்கும் விளங்கும்.

பெருந்தோட்ட தொழில்துறையோடு சம்பந்தப்படாத பலர் ஊடகங்களில் வருகின்ற பெருப்பித்த தகவல்களைப் பார்த்து சம்பள உயர்வு தொடர்பாக பெருமை பட்டுக் கொள்ளலாம். ஆனால் அந்த மக்களோடு இருந்து அவர்கள் அனுபவித்து வருகின்ற பிரச்சனைகளை அறிந்தவர்களுக்கு இந்தப் பகட்டு பரப்புரை புரியும்.

தோட்டங்களில் புதிதாக புதிய தொழில்நுட்பத்துடன் தேயிலை கொழுந்தின் நிறைய அளக்கும் கருவிகளின் மூலம் ஒவ்வொரு தோட்டத் தொழிலாளர்களிடமிருந்தும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 கிலோ தேயிலை கொழுந்து கொள்ளையடிக்கப்படுகிறது. இதை மட்டுப்படுத்துவதற்கு நாட்டில் வலுவான சட்டங்கள் இருக்கின்ற போதும் அதை தோட்ட நிர்வாகங்கள் உதாசீனப்படுத்துகின்றன.

பெருந்தோட்ட மக்கள் சம்பள உயர்வினால் சந்தோஷமடைந்துள்ளதாக காட்டுவதன் மூலம் தோட்டங்களின் நிலவுகின்ற பிரச்சனைகளை மூடி மறைக்க முட்படக்கூடாது.

தோட்டத் தொழிலாளர்கள் கடந்த காலங்களில் அடைந்த முன்னேற்றத்தை மறந்துவிடவில்லை. யார் ஆளும் கட்சியாக வந்தாலும் அவர்களின் பின்னால் ஓடுவதற்கு சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அது எல்லா சமூகத்திலும் எல்லா நாட்டிலும் இருக்கின்ற பொதுவான விடயம்.

இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒவ்வொரு செயற்பாட்டாளரும் நம்மை அர்ப்பணித்து மக்கள் மத்தியில் செல்ல வேண்டியது முக்கியமானதாகும்.

ஏனெனில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாமே நிலையானவர்கள். எமக்கே நம் மக்கள் மீது பொறுப்பு இருக்கிறது. சிலர் மனோ ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி எம்மை செயல்படவிடாமல் தடுப்பதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சிகளை தவிடு பொடியாக்கி எமது தமிழ் மக்களுக்காக நிலையாக நின்று பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது.” எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular