இந்தோனேசியாவில் அண்மையில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) அதிகாலை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.
இந்த அனர்த்தத்தில் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் 9,200க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.
இதனிடையே, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சில மாகாணங்களில் ஏற்பட்டிருந்த மின்தடையை சீரமைத்து, மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
