இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (17) காலியில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (16) மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
நேற்றைய ஆட்ட நேர நிறைவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 460 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ஓட்டங்களைப் பெற்றார். கே.எல். ராகுல் 82 ஓட்டங்களையும், துருவ் ஜூரெல் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், கேசர நுவந்த 3 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமானதும் இந்திய அணி தனது எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து மேலும் 2 ஓட்டங்களை மாத்திரம் சேர்த்த நிலையில், 462 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பிக்கவுள்ளது.
