HomeTop newsரஷ்யா - யுக்ரைன் வான்வழித் தாக்குதல்கள் தீவிரம்

ரஷ்யா – யுக்ரைன் வான்வழித் தாக்குதல்கள் தீவிரம்

ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பிலும் தலா 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் யுக்ரைனால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஆளில்லா வானூர்தி தாக்குதல் இதுவென ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

822 ஆளில்லா வானூர்தி பயன்படுத்தி யுக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அதில் 600 ஆளில்லா வானூர்திகள் மொஸ்கோவை இலக்கு வைத்து அனுப்பப்பட்டதாகப் பிராந்திய ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் தென்மேற்கு ரஷ்யாவின் ரொஸ்டோவ் (Rostov) பிராந்தியத்தில் ஐந்தினரும், பெல்கோரட் (Belgorod) மற்றும் மொஸ்கோ பகுதிகளில் இருவருமாக மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மொஸ்கோ மையப்பகுதியிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ‘வைல்ட்பெர்ரீஸ்’ (Wildberries) இணையவழி வர்த்தக நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகித் தீக்கிரையாகியுள்ளது.

மறுபுறம், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களிலும் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் கியேவில் உள்ள ‘ஃபிளமிங்கோ’ (Flamingo) ஏவுகணைகளுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் மையம் மற்றும் வானூர்தி உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றையே தாம் இலக்கு வைத்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

எனினும், பொச்சைனா (Pochayna) மாவட்டத்தில் உள்ள புத்தகங்கள் மற்றும் பழைய இசைத்தட்டுகள் விற்பனை செய்யும் பிரபல சந்தையொன்று இந்தத் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் தங்களது அரிய வகை இசைத்தட்டுகள் மற்றும் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் மாத்திரம் யுக்ரைனின் 13 பிராந்தியங்களை இலக்கு வைத்து ரஷ்யா 1,550 க்கும் அதிகமான ஆளில்லா வானூர்திகள், 1,560 வழிகாட்டப்பட்ட வான் குண்டுகள் மற்றும் 62 ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular