ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் தொடர்பான பிரச்சினை முதன்மையாக விவாதிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடைக்கால குழு நியமனம், ICC விதிமுறைகளுக்கு முரணானதாக கருதப்படுகின்ற நிலையில், அதுகுறித்த விளக்கங்களை பெறும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இடைக்கால நிர்வாக குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கடந்த வாரம் ICC, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
அந்தக் கடிதத்தில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்காக விரைவில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ICC வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கிரிக்கெட் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் புதிய யாப்பு தயாரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ICC காலவரையற்ற அவகாசம் வழங்கும் என இடைக்கால குழு எதிர்பார்த்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
