சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) பொறியியலாளர் சங்கம் இன்று (21) முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பல முறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தாலும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததால் இந்த நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுதாபொல, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தாலும், இனி அவற்றிலிருந்து விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் நேரடியாக ஒப்படைக்கப்படாத போதிலும், தேசிய தேவையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பல பணிகளிலிருந்தும் விலக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையால் திட்ட ஒருங்கிணைப்பு பணிகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் அவர் எச்சரித்தார்.
