‘தி டைம்ஸ் ஆஃப் ஓமான்’ வெளியிட்ட தகவலின்படி, ஆசிய நாடொன்றிலிருந்து இணையக் குற்றவாளிகளால் மோசடியாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை ரோயல் ஓமான் காவல்துறை மீட்டுள்ளது.
இந்தப் பணத்தை ஓமானில் உள்ள ஒரு வங்கியின் மூலம் உள்ளூர் நாணயமாக மாற்ற முயற்சிக்கப்பட்டதாகவும், அதனை ரோயல் ஓமான் காவல்துறை தடுத்து நிறுத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்டர்போலின் ஒத்துழைப்புடன் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், குறித்த பணம் எந்த ஆசிய நாட்டிலிருந்து திருடப்பட்டது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பெரும் நிதி மோசடி சம்பவங்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. நாட்டின் கருவூலத்திலிருந்து சுமார் 2.5 மில்லியன் டாலரும், அஞ்சல் துறையிலிருந்து 625,000 டாலரும் மோசடியாகப் பறிமுதல் செய்யப்பட்டதாக முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனால், ஓமானில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 6.6 மில்லியன் டாலரில் இலங்கையிலிருந்து மோசடியாக மாற்றப்பட்ட பணமும் உள்ளதா என்ற கேள்வி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலும் சமீப காலங்களில் இதுபோன்ற பெரியளவிலான நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகவில்லை என்றும் சில தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
