சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே திறைசேரியால் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் உரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை என தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் உர விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் உரத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், விவசாயிகளின் சுமையை குறைக்கும் நோக்கில் நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 5,000 ரூபா மானியம் வழங்கப்படுவதாகவும், இரண்டு ஹெக்டேயர் வரை இந்த மானியம் வழங்கப்படுவதால் 10,000 ரூபா வரை பெற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் 5,000 ரூபா கூடுதல் உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உர விநியோகம் இடையூறு இன்றி தொடரும் என்றும், விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காகவே அரசு இந்த மேலதிக மானியத்தை வழங்குவதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
