தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள், கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டிற்கு திரும்பியபோது, அவர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் அளவிலான ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘அமிதானந்த’ என்ற பிக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கையின் பிரதான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்த அமிதானந்த தேரரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
