Homeஉள்நாடு23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு

23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கௌரவ பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தின் குழுக்களின்
பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, தொழிற்கல்வி
பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி மற்றும் உயர்கல்வி
பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் பல்வேறு கட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த அறிக்கையை அமைச்சின் இணையதளத்தில் வெளியிட்டு, பொது அறிவித்தல் மூலம் அந்த அறிக்கை தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஒரு மாத காலம் வழங்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், உயர்கல்வித் துறை தொடர்பான உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்னவும், பாடசாலைகளில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன ஆகியோரும் முன்வைத்தனர்.

மேலும், பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ முன்வைத்தார்.

அத்துடன், தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளல் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular