Homeஉள்நாடுகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்!

இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் எனத் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்று அவர்களது போராட்டப் பந்தலில் முன்னெடுத்த ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“1948 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கும் ஒரு நீண்ட, இருண்ட பாதையின் தொடக்கமாக மாறியது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் சட்ட நிபுணர்கள் அல்லர். நாங்கள் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.

அவர்களை வளர்த்தவர்கள். அவர்களை இழந்தவர்கள். வவுனியா நகரில், இந்த வன்னிப் பந்தலில் 3 ஆயிரத்து 271 நாட்களாக நாங்கள் அமர்ந்திருக்கின்றோம். மழையிலும், வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை. 1948 இல், இலங்கை சுதந்திரம் பெற்றது.

ஆனால் அந்தச் சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களைக்  காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை.

இந்த அநீதியின் வேர்கள், சோல்பரி கமிஷன் உருவாக்கிய அரசியல் அமைப்பிலேயே உள்ளன. இங்கிலாந்து இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறி, பெரும்பான்மை ஆட்சியை ஜனநாயகமாக்கி, தமிழர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுச் சென்றது.

காலனித்துவத்திற்கு முன்பு, தமிழர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் அதிகாரம் இருந்தது. தங்கள் சொந்த நிலமும் நிர்வாகமும் இருந்தது. இந்த உண்மை அரசமைப்பில் சொல்லப்படவில்லை. இது சொல்லப்படாத உண்மை.

பின்னர் எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஒரு சட்டபூர்வ அநீதியாக மாறியது. அந்தத் தவறுகளின் விலையையே இன்று நாங்கள் இந்தப் பந்தலில் எங்கள் கண்ணீரோடு செலுத்துகின்றோம்.

எங்கள் கேள்வி எளிமையானது. எங்கள் குழந்தைகள் எங்கே? அவர்கள் எங்கே? யார் பொறுப்பு? எப்போது நீதி? கரி நாள் எங்களுக்கு ஒரு சடங்கு நாள் அல்ல. அது ஒரு நினைவூட்டல்.  சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரிநாள்.” – என்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular