‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதன் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாகவே சில இடங்களில் இவ்வாறான ஆபத்து அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகக் கூறினார்.
‘டித்வா’ சூறாவளியின் போது நிலச்சரிவு ஏற்படாத, ஆனால் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்த இடங்களில் கனமழை பெய்யும்போது நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கலாநிதி வசந்த சேனாதீர மேலும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் கனமழை காரணமாக நிலச்சரிவு அபாயம் தீவிரமடையக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், நிலச்சரிவு அபாயம் காரணமாக தற்போது 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக அபாயகரமான நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கனமழை பெய்யும் போது நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கலாநிதி வசந்த சேனாதீர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
“உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள். குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 15,000 அதிக அபாயகரமான குடும்பங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அதில் சுமார் 5,000 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இந்த ‘டித்வா’ சம்பவத்துடன் மேலும் 16,793 குடும்பங்கள் அதிக அபாய நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் இந்த எண்ணிக்கை நிச்சயமாக மேலும் அதிகரிக்கும். இது எந்தளவுக்கு கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஒட்டுமொத்தமாக 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக அபாய நிலையில் உள்ளன. தகவல்கள் கிடைக்காத குடும்பங்கள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
உங்கள் பகுதியில் கனமழை பெய்தால், பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ‘டித்வா’ சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்பானவை என நாங்கள் அடையாளம் கண்டிருந்த இடங்களும் கூட பாதுகாப்பற்றதாக மாறியுள்ளன.
