அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்களை ஜனாதிபதி இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் இனவாத மோதல்களுக்கு இடமளிக்காமல், அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதித்து வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் வேலைத்திட்டங்களுக்கும் சபை தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.
இதன்போது, முஸ்லிம் சமூகம் தமது சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எந்தவொரு சமூகமும் தமது கலாசார அடையாளத்தின் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலை அல்லது அச்சத்தை எதிர்கொள்ளாத வகையில், அனைவரும் சமத்துவத்துடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய சமூகமொன்றை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக தற்போதைய அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
