இந்தோனேஷியாவின் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) உறுதிப்படுத்தியுள்ளது.
புளோரஸ் தீவுப் பகுதியில் நேற்று (15) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததால், அதன் தாக்கம் கடுமையாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. எனினும், கடலோரப் பகுதிகளில் 1.5 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் சிறிய சுனாமி அலைகள் பதிவாகியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தத்தினால் 350க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், நிலச்சரிவுகள் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாக போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் வெளித் தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுவதுடன், தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் இன்னும் சென்றடைய முடியாத நிலையும் காணப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
