HomeTop newsபதுளை - நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

பதுளையிலிருந்து அம்பேவெல வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் நானுஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியாளர் தனுஷ்கா ஆகியோரின் தலைமையில், சமய வழிபாடுகளுடன் இந்த ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

‘டித்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மலையக ரயில் பாதை, ரயில்வே திணைக்களத்தின் கடுமையான உழைப்பினால் சீரமைக்கப்பட்டு, பயணிகளின் நலன் கருதி மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நானுஓயா முதல் பதுளை வரையான ரயில் பாதையின் தூரம் 85 கிலோ மீற்றர்கள் ஆகும் என்பதுடன், இந்தப் பயணத்திற்குச் சுமார் 3 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் எடுக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

‘டித்வா’ புயலின் தாக்கம் மலையக ரயில் பாதையில் எதிரொலித்ததால், மத்திய மலைநாட்டுக்கான ரயில் சேவைகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தன.

இதனால் பதுளையிலிருந்து அம்பேவெல வரையான பகுதிகளுக்கு மாத்திரமே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 23 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட கடுமையான பிரயத்தனங்களுக்குப் பின்னரே இந்த ரயில் பாதை தற்போது மீளமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் பதுளையிலிருந்து நானுஓயா வரை தினசரி 4 ரயில் சேவைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், இவ்வருட இறுதிக்குள் மலையக ரயில் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை வரை முழுமையாக ரயில்களை இயக்குவதற்கு எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் சிரேஷ்ட மாவட்ட ரயில்வே நிர்வாகப் பொறியாளர் தனுஷ்கா ஆகியோர் தெரிவித்தனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில் சேவையில், நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணிப்பதற்காக ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தந்து தங்களது பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular