தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதிய ஜனாதிபதி ரொட்ரிகோ பாஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தலைநகர் லா பாஸ் நகரில் ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்று கூடி பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டனர். தொழிலாளர் சீர்திருத்தம் மற்றும் எரிபொருள் பிரச்சினைகளை முன்வைத்து நடைபெற்ற இந்தப் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்பில் இருந்த பொலிசார் மீது சிறிய ரக டைனமைட் வெடிபொருட்கள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பிரயோகித்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறி பதற்றநிலை ஏற்பட்டது.
இதேவேளை, சம்பள உயர்வை கோரி ஆசிரியர்களும், நிலச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், தலைநகர் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
“ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்” என போராட்டக்காரர்கள் கோஷமிட்டு வரும் நிலையில், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
