ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, கடும் நிதி இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரிட்டனின் சண்டர்லேண்ட் (Sunderland) தொழிற்சாலையில் சீன வாகன நிறுவனங்களுக்காக கார்களை உற்பத்தி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி இவான் எஸ்பினோசா தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், நிறுவனம் 533 பில்லியன் யென் (சுமார் 2.5 பில்லியன் பவுண்டுகள்) நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. இதையடுத்து செலவுகளை குறைத்து இலாபகரமான நிலையை மீட்டெடுக்க பல்வேறு மாற்று வழிகள் ஆராயப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சண்டர்லேண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 6,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் நோக்கில் வெளிப்புற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என நிர்வாகம் கருதுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சீனாவின் Chery நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Chery தனது Chery, Jaecoo மற்றும் Omoda பிராண்டுகள் மூலம் ஐரோப்பிய சந்தையில் விரிவாக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது.
அதேபோல், Ford Motor Company மற்றும் Stellantis உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் குறைவாக பயன்படுத்தப்படும் உற்பத்தி நிலையங்களை சீன நிறுவனங்களுக்காக பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. சீனாவின் BYD நிறுவனமும் ஐரோப்பாவில் உற்பத்தி விரிவாக்க வாய்ப்புகளை மதிப்பீடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன மின்சார வாகனங்களுக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கும் தேவை, குறைந்த உற்பத்திச் செலவு ஆகியவை உள்ளூர் கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக மாறியுள்ளன. இதன் தாக்கமாக நிசானின் உலகளாவிய செயல்பாட்டு இலாபம் கடந்த ஆண்டை விட சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும், அமெரிக்க இறக்குமதி வரிகள் மற்றும் சீன சந்தை போட்டி நிறுவனத்தின் வருவாயை மேலும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பாவில் சுமார் 900 ஊழியர்களை குறைக்கும் திட்டத்தையும் நிறுவனம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், சண்டர்லேண்ட் போன்ற முக்கிய உற்பத்தி மையங்களை நிலைநிறுத்தவும் பயன்படுத்தவும், புதிய கூட்டாண்மை வணிக மாதிரிகள் அவசியம் என நிசான் நிர்வாகம் கருதுகிறது.
