Homeஉள்நாடுஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிபந்தனைகளுடன் மலையகக் காணி உரிமையையும் இணைக்கவும்!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிபந்தனைகளுடன் மலையகக் காணி உரிமையையும் இணைக்கவும்!

இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வரிச்சலுகையைத் தனது கட்சி ஆதரிக்கின்றது என்றும், எனினும் இந்த முன்னுரிமைச் சலுகையானது மலையகத் தமிழர்களின் காணி உரிமை மற்றும் கண்ணியமான குடியுரிமை உரிமைகளை உறுதிப்படுத்தும் நிபந்தனைகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குநர் பவுலா பம்பலோனி தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினரைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோவின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பேராசிரியர் விஜயசந்திரன் மற்றும் பரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டு மலையக மக்களின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

இதன்போது மனோ கணேசன் எம்.பி. முன்வைத்த முக்கிய விடயங்கள் வருமாறு:-

கட்டமைப்பு சார்ந்த புறக்கணிப்பு

மலையகத் தமிழ்ச் சமூகம் தொடர்ச்சியாகக் கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது.

நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொடுத்து தேசிய பொருளாதாரத்தைத் தாங்கி நின்ற போதிலும், நிலமின்மை, வறுமை மற்றும் பொருளாதாரச் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகள் அம்மக்களைத் தொடர்ந்தும் வாட்டி வதைக்கின்றன.

அரசின் மௌனம்

தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் மலையகப் பிராந்தியத்தின் நீண்டகால வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்துப் பலமுறை சுட்டிக்காட்டியும், இது தொடர்பான பேச்சுகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது.

வீடமைப்புத் திட்டத்தில் பாரபட்சம்

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்த மலையகக் குடும்பங்கள், அரசின் தேசிய வீடமைப்புத் திட்டத்தில் இருந்து திட்டமிட்டு விலக்கப்பட்டுள்ளனர்.

“அரசின் பொதுவான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 5 மில்லியன் ரூபா வழங்கப்படுகின்றது. ஆனால், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் அந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படாமல், இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இது அப்பட்டமான பாரபட்சமாகும்.” – என்றும் மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சர்வதேச சமூகத்தின், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீடு மற்றும் கண்காணிப்பு அவசியம் என்பதையும் தூதுக்குழுவினரிடம் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular