Homeஉள்நாடுகூட்டு செயற்குழு அமைக்க உத்தேசம்!

கூட்டு செயற்குழு அமைக்க உத்தேசம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான கூட்டணி குறித்த பேச்சுகள் நேர்மறையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேர்தல் காலம் இல்லை என்பதால், இந்தப் பேச்சுகளை நிதானமாகவும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.

இந்த அரசியல் நகர்வின் முக்கிய கட்டமாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

இரு கட்சிகளின் செயற்குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ‘கூட்டுச் செயற்குழு’ ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் எதிர்கால அரசியல் பயணத்துக்கான திட்டங்களை வகுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாட்டின் போது, ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்த அரசியல் பயணம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் சில முக்கிய உட்கட்சி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தலைமைத்துவத்திற்குப் பலமான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் செல்வாக்குள்ள இளம் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸவிடம் கோரப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்குச் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கௌரவப் பதவிகளை வழங்கிவிட்டு, அந்தப் பொறுப்புகளுக்கு இளம் பிரதிநிதிகளை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தவிசாளர் பதவியை ஏற்க மறுத்துள்ள நிலையில், வெற்றிடமாக உள்ள அந்தப் பதவிக்கு உடனடியாக ஒருவரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கு இத்தகைய மறுசீரமைப்புகள் இன்றியமையாதவை என்பதே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular