Homeஉள்நாடுசம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும்

சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும்

– மனோ, திகா எம்.பிக்கள் கூட்டாக வலியுறுத்து 

“தோட்டத் தொழிலாளருக்கான இந்த மாத சம்பள உயர்வு 400/= ரூபா அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. இதையிட்டு மகிழ்ச்சி. அப்படி அது வழங்கப்படும் போது, 3 அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்கள், 22 தனியார் தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளர் தோட்டங்கள், தனியார் சிறு தோட்டங்கள், ஆகிய நான்கு பிரிவு தோட்டங்களில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். கடந்த வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் போது, அரசுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்பிக்கள் வாக்களித்தோம். அதன்போது இதைத்  சொல்லித்தான் நான் வாக்களித்தேன். இப்போதும் அதையே இங்கே தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தொழில் அமைச்சின் அமைச்சக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க. மனோ கணேசன் எம்.பி., திகாம்பரம் எம்.பி., கலைச்செல்வி எம்.பி. உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட திகாம்பரம் எம்.பி., “அரசின் 200/= ரூபா கிடைக்கும் என எண்ணுகின்றேன். ஆனால், கம்பனித் தோட்டங்களில் இப்போதே, தொழிலாளர் கொண்டு வர வேண்டிய கொழுந்து நிறை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. வழமையை விட அதிக நிறை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், முழு நாள் சம்பளம் தர மாட்டோம் என்று இப்போதே கம்பனிகள் தொழிலாளரிடம் கூறத் தொடங்கி விட்டன. இதை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சொன்ன சம்பள உயர்வு 400/= ரூபா கிடைக்காது.” – என்று கூறினார்.

இவ்வேளையில் மீண்டும் கருத்துக் கூறிய மனோ கணேசன் எம்.பி., “எல்லா காலத்திலும், எல்லாப் பிராந்தியங்களிலும் ஒரே மாதிரியான, கொழுந்து கிடைப்பதில்லை. ஆகவே அதை வைத்துக்கொண்டு நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்து வழங்கி விளையாடாமல், கண்காணிப்பது அரசின் பணியாகும். அதை இந்தத் தொழில் அமைச்சு, குறிப்பாக  அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் கவனத்தில் எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன்.” – என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular