இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இருபது20 உலகக் கிண்ண தொடருக்குப் பிறகு அவர் சந்தித்த இடது முழங்கால் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய மேலும் காலம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் (BCCI) பும்ராவிடம் மீண்டும் ஆடுகளத்திற்குத் திரும்புவதற்கு அவசரம் காட்ட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், இத்தொடருக்காக பும்ராவிற்குப் பதிலாக சேர்க்கப்படும் வீரர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்குப் பிறகு பும்ரா இதுவரை எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து தொடர் முடிந்த உடனேயே, பும்ராவின் நீண்டகால உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு BCCI வைத்தியக் குழுவால் தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைய, அவர் தனது காயத்திற்காக ஊசி மருந்தொன்றையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது போட்டி ஓகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்திய அணி ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் கொழும்பில் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியிலும் விளையாடவுள்ளது.
