‘திட்வா’ (Ditwah) சூறாவளியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, யுனிசெப் (UNICEF) அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் ஜூன் 12 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
“திட்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி – ஏப்ரல் 2026)” என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. பதிலளிக்கும் நடவடிக்கைகளின் ஆரம்பக் கட்டத்தில் எட்டப்பட்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தலையீடுகள் குறித்து கலந்துரையாடவும் இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இடைவிடாத கல்வியை உறுதிசெய்தல், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும் பிரதமரும் யுனிசெப் பிரதிநிதிகளும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி Emma Brigham, யுனிசெப் பிரதிநிதி Begona Arellano உள்ளிட்ட யுனிசெப் அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
