19வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்று முடிவில் முன்னிலை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் பெங்களூரு மற்றும் முன்னாள் சாம்பியன் குஜராத் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் தரம்சாலாவில் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அணியின் கேப்டன் ரஜத் படிதார் அபாரமாக விளையாடி 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்தது.
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, பெங்களூரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர் விக்கெட்டுகளை இழந்தது. திவேட்டியா மட்டும் போராடி அரைசதம் அடித்தாலும், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
இறுதியில் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 5வது முறையாக ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 2009, 2011, 2016 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி, இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இறுதிப்போட்டியில், வரும் 29ஆம் தேதி நடைபெறும் குவாலிபயர்–2 போட்டியில் வெற்றி பெறும் அணியை பெங்களூரு எதிர்கொள்ள உள்ளது.
