மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்த வீட்டிலும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை பொலிஸார் சமர்ப்பித்தனர்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில், சம்பவ இடத்தில் உள்ள வீட்டுக்குள் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் வழியாக நுழைய முடிந்தாலும், 2026 மே 05 முதல் மே 07 வரை மேற்கொள்ளப்பட்ட சி.சி.டி.வி பரிசோதனையில் வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் நுழைந்ததாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடு மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி சாதனங்களும் பரிசோதிக்கப்பட்டதில், அவற்றிலும் எந்தக் காட்சிகளும் பதிவாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சி.சி.டி.வி அமைப்புகளை பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சி.சி.டி.வி DVR இயந்திரங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை பெற அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத இரண்டு வகை மருந்து மாத்திரைகள் (மொத்தம் 20) குறித்து மேலதிக ஆய்வுகளும் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மரணமடைந்தவருக்கும் வீட்டுப் பணியாளர்களுக்கும் இடையிலான தொலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதற்கிடையில், விசாரணையில் பிணையாளர்கள் தொடர்பான முக்கிய சாட்சிகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என நீதவான் சுட்டிக்காட்டி, விசாரணை முறையை விரைவுபடுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைகள் பின்னர் நடத்தப்படும் எனவும் நீதவான் அறிவித்தார்.
