பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) நிராகரித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க வழங்கினார்.
வழக்கில் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள “சதித் திட்டம்” தொடர்பான குற்றச்சாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது என்ற பிரதிவாதி தரப்பின் வாதம் அடிப்படையற்றது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அதன்படி, ஆரம்பக்கட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்படுவதாகவும், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து விசாரிப்பதில் எந்தவித சட்டத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்து காட்டப்பட்டது.
அப்போது, தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த யோஷித ராஜபக்ஷ, தாம் குற்றவாளி அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, குறித்த வழக்கின் விசாரணைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
