திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
இவர்களில் 260 பேர் வெளிநாட்டவர்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கைராங் எல்லையானது சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய எல்லைக் கடக்கும் இடமாக உள்ளது.
இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் எல்லையில் மண்சரிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதேநேரம் நேபாளத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் 341 வௌிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.
அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் எந்த நாடுகள் என உறுதிப்படுத்தப்படாத 100 பேரும் அடங்குவதாக பீபீசி செய்தி வௌியிட்டுள்ளது.
