மத்திய கிழக்கு மோதலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.
இந்நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
மொத்த நிதியில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களை சமாளிப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தொலைதூரத்தில் இடம்பெறும் மோதல்களின் தாக்கத்தால் எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் வர்த்தக நடைமுறைகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் போட்டித்திறனை மேம்படுத்துதல், பொருளாதார வலயங்களில் முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் இலங்கையின் திறன் மேலும் வலுப்பெறும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய கிழக்கு மோதலால் அதிகரித்துள்ள பொருளாதார அழுத்தங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலையை சமாளிப்பதற்காக இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு மொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலரும், கம்போடியாவுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்படவுள்ளன.
