வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா நேற்று (29) இரவு வீதி உலா வந்தது.
பெரஹராவைப் பார்வையிட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இணைந்துகொண்டார்.
நேற்று (29) பிற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ராஜமகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ருஹுணு பிரதான சங்கநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ராஜமகா விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் ஜனாதிபதி, ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர அருகில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஹஸ்திராஜா யானை மீது புனித கலசத்தை வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
பின்னர் கிரிவெஹெர வளாகத்தில் மின் விளக்கு அலங்காரத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
நாட்டின் அனைத்து இன மக்களையும் ஒரே புனிதஸ்தலத்தில் ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, நமது நாட்டின் தேசிய தனித்துவத்தையும் தேசிய ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும் என்று இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு நாட்டின் அபிவிருத்தியிலும் அந்த நாடும் சமூகமும் கட்டமைக்கப்பட்ட வரலாற்று மற்றும் கலாசார அடித்தளம் முக்கியமானது என்றும், உலகம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலும் நமது நாடு நாட்டின் வரலாற்றுச் சுவடுகள் மற்றும் அடித்தளங்களைப் பாதுகாத்துக் கொண்டே முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அந்த வரலாற்றுக் கலாசார பாரம்பரியத்திற்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான மக்களின் ஆழமான தொடர்பைக் காட்டும் மிக முக்கியமான சந்தர்ப்பமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் வருடாந்த எசலா பெரஹெராவை குறிப்பிடலாம் என்றும் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
எந்தவொரு சமூகமும் நாடும் அந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் தனித்துவமான கலாசார அடித்தளத்துடனேயே நிலைத்திருக்கிறது.
இந்த யுகம், உலகில் அறிவியலும் தொழில்நுட்பமும் பாரிய பிரவேசங்களையும் வளர்ச்சியையும் காட்டும் ஒரு யுகமாகும். உலகின் கலை மற்றும் இலக்கியத்திற்குள் இந்தத் தொழில்நுட்பத்துடன் இணைந்து மிகப்பெரிய மாற்றங்களை இந்த யுகம் ஏற்படுத்துகிறது.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் அந்த நாடும் சமூகமும் கட்டமைக்கப்பட்ட வரலாற்று ரீதியான கலாசார அடித்தளம் மிக முக்கியமானதாகும். உலகில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டாலும், நமது நாடு நாட்டின் வரலாற்றுச் சுவடுகளையும் அடித்தளங்களையும் பாதுகாத்துக் கொண்டே முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
பூமியுடன் நாம் கொண்டுள்ள இயற்கையான தொடர்பை துண்டித்துக் கொண்டால், நாம் வீழ்ச்சியடையும் சமூகமாக மாறிவிடுவோம்.
இது நாட்டின் அடையாளம், சமூகத்தின் கௌரவம் ஆகிய அனைத்தையும் அழித்துவிடும். அந்த வரலாற்றுக் கலாசார பாரம்பரியத்திற்கும் தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் இடையிலான இயல்பான தொடர்பைக் காட்டும் மிக முக்கியமான சந்தர்ப்பமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பெரஹராவைக் குறிப்பிடலாம்.
எமது நாயக்க தேரர் குறிப்பிட்டது போல், 2187 ஆண்டுகளாக இடைவிடாமல் இந்த பெரஹரா நடைபெற்று வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இடைவிடாமல் ஏதேனும் ஒரு விடயம் அல்லது கலாசார நிகழ்வு நடைபெற்று வந்தால், அது எவ்வளவு ஆழமான கலாசார அடித்தளத்தை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
எமது பல தலைமுறைகள் இந்த வரலாற்று நிகழ்வுடன் தொடர்புகொண்டுள்ளன. ஒரு சமூகம் இடைவிடாமல் நிலைத்திருப்பது, அந்த கலாசார பாரம்பரியங்களுடன் இடைவிடாமல் இணைந்திருக்கும் பட்சத்தில் மாத்திரமே சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.
