தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரை அச்சுறுத்தி தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் உணவக உரிமையாளர் விராஜ் விக்கிரமநாயக்கவை, ரூ.5 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள தனது உணவகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அது சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்ததாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியரும் காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர் இன்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக காவல்துறை நிலையத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
