ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் முதன்முறையாக பங்கேற்று வரும் கேப் வெர்டே அணி, கால்பந்து உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான ஸ்பெயினை 0-0 என்ற கோலின்றி சமநிலையில் தடுத்து நிறுத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட இந்தச் சிறிய தீவு நாடு, நட்சத்திர வீரர்கள் நிறைந்த ஸ்பெயின் அணியின் தாக்குதல்களை முழுமையாக கட்டுப்படுத்தி உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒழுங்குமுறையுடனும் கட்டுக்கோப்புடனும் விளையாடிய கேப் வெர்டே, ஸ்பெயின் அணிக்கு எந்தவித சுதந்திரத்தையும் வழங்கவில்லை. பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஸ்பெயின் வீரர்கள் தெளிவான கோல் வாய்ப்புகளை உருவாக்க போராடினர்.
முதல் பாதியில் ஸ்பெயினின் சிறந்த வாய்ப்பு ஃபெரான் டோரஸிடம் வந்தது. மார்க் குகுரெல்லா வழங்கிய பந்தை அவர் அடித்தபோது அது கோல் கம்பில் பட்டு வெளியேறியது. அதன்பின் மிக்கெல் ஓயர்சபால் தலையால் முட்டிய பந்தையும் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹா அபாரமாக தடுத்து நிறுத்தினார். 40 வயதான வோசின்ஹா தனது அனுபவத்தை வெளிப்படுத்தியதோடு, முதல் பாதியின் இறுதியில் அய்மெரிக் லபோர்ட்டின் தலையால் அடிக்கப்பட்ட பந்தையும் சிறப்பாகக் காப்பாற்றினார்.
‘ப்ளூ ஷார்க்ஸ்’ என அழைக்கப்படும் கேப் வெர்டே அணி, தற்காப்பில் மட்டுமல்லாமல் இடைக்கிடையே எதிரணியின் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்களையும் மேற்கொண்டு ஸ்பெயினுக்கு சவால் விடுத்தது.
இரண்டாம் பாதியில் ஃபேபியன் ரூயிஸின் தொலைதூர முயற்சி கோல் கம்பத்திற்கு மேலாகச் சென்றது. அதன்பின்னரும் கேப் வெர்டே வீரர்கள் தங்களது உறுதியான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தியதால், ஸ்பெயின் அணியால் முழுமையான ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
71-வது நிமிடத்தில் லாமின் யமால் மாற்று வீரராக களமிறங்கியதும் ஸ்பெயின் தாக்குதல்களில் வேகம் அதிகரித்தது. இருப்பினும், கேப் வெர்டே பாதுகாப்பு வரிசை அவரையும் திறம்பட கட்டுப்படுத்தியதால் கோல் வாய்ப்புகள் குறைந்தன.
போட்டியின் இறுதிக் கட்டத்தில் ஓயர்சபாலுக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பும் வீணானது. இதன் மூலம் இறுதி விசில் ஒலிக்கும் வரை உறுதியுடன் போராடிய கேப் வெர்டே, உலகக் கிண்ண அரங்கில் தனது முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க புள்ளியைப் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
