HomeTop newsகேரம் போர்ட் வழக்கு - நீதிமன்றம் எடுத்த அதிரடி தீர்மானம்

கேரம் போர்ட் வழக்கு – நீதிமன்றம் எடுத்த அதிரடி தீர்மானம்

கேரம் போர்ட் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரால் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு கோரி, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக ஜூன் மாதம் 17 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மனு இன்று (01) பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட தனது கட்சிக்காரருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வினால் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவ்வாறு இருக்கையில், சட்டமா அதிபரால் அதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, ஒரே குற்றச்சாட்டுக்காக இரண்டு முறை வழக்குத் தொடர்வது சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தனது கட்சிக்காரர் முதற்கட்ட ஆட்சேபனைகளை எழுப்பிய போதிலும், மேல் நீதிமன்ற நீதிபதி அந்த முதற்கட்ட ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதியரசர்கள் அமர்வு, இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக ஜூன் மாதம் 17 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் காரியாலயங்களுக்கு விநியோகிப்பதற்காக, சதொச நிறுவனம் மூலம் 14,000 கேரம் போர்ட்களையும் 11,000 தாயக் கட்டைகளையும் இறக்குமதி செய்து விநியோகித்ததன் ஊடாக அரசுக்கு 39 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular