எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மீட்டர் அடிப்படையில் இயங்கும் முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றர் கட்டணத்தை ரூ.130 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை அண்மையில் மொத்தமாக ரூ.36 உயர்ந்துள்ளதுடன், கிரீஸ், இன்ஜின் ஆயில் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கட்டண திருத்தம் செய்யப்படாவிட்டால் முச்சக்கர வண்டித் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா எச்சரித்துள்ளார்.
மேலும், IMF நிபந்தனைகளால் சிறு தொழில்முனைவோர் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு போதுமானதாக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
