அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மெட்ரோ பேருந்து’ திட்டத்திற்காக சுமார் 7 பில்லியன் ரூபா பொதுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மெட்ரோ பேருந்து திட்டம் என்பது இலங்கை போக்குவரத்துச் சபையின் தற்போதைய சேவையை வேறொரு பெயரில் மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியே தவிர புதிய மாற்றமல்ல என தெரிவித்தார்.
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச் சபையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இலங்கை போக்குவரத்து சபையின் காரணமாகவே நாட்டின் போக்குவரத்துத் துறை சீரழிந்தது. தற்போது மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் மீண்டும் அதே தவறை செய்கிறது” என அவர் விமர்சித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் திறைசேரி நிதி வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதனை “தேசியக் குற்றம்” எனவும் வர்ணித்தார்.
மேலும், புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதால் பொதுப் போக்குவரத்தில் காணப்படும் அடிப்படை சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காது என்றும், இது கடந்தகால தோல்விகளை மீண்டும் பிரதிபலிக்கும் முயற்சியாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இந்த திட்டம், பொருளாதார ரீதியாக பயனற்றதாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
