பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதராகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது கையூட்டல் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யுமாறு கையூட்டல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கவும் ஆணைக்குழு கோரியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக பெற்றதாக அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், பிணை நிபந்தனைகளை அவர் மீறியுள்ளதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையை பாதித்துள்ளதாகவும் கையூட்டல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை பிறப்பிக்குமாறும் ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
