Homeஉள்நாடுசெம்மணி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? புதிய ஸ்கேன் முடிவுகளின் பின்பே இறுதி முடிவு

செம்மணி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? புதிய ஸ்கேன் முடிவுகளின் பின்பே இறுதி முடிவு

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஸ்கேன் பரிசோதனையிலேயே தீர்மானிக்கப்படும்” என்று சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.

புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் அவர், ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனை மற்றும் அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில்,

“கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன், சித்துப்பாத்தி இந்து மயானத்தின் ஒரு பகுதியில் ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஸ்கேன் பரிசோதனையில் என்புத் தொகுதிகள் இருக்கலாம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலேயே தற்போது மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஸ்கேன் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மனித என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர், ஏனைய இடங்களில் மனித எச்சங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இதற்காக மீண்டும் ஒருமுறை ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அந்தப் புதிய பரிசோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே அகழ்வுப் பணிகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular