Homeஉள்நாடுபதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்: கல்வி முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தல்

பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்: கல்வி முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தல்

பதுளை மாவட்டத்தின் தமிழ் மொழிப் பாடசாலைகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கல்வி முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக உயர்தர (A/L) வகுப்புகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த முன்னேற்றம் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் “ஒரு புதிய வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை நோக்கி செல்வதாக குறிக்கிறது”.

இந்த வளர்ச்சியில் பண்டாரவளை மத்திய கல்லூரி, பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலை, விவேகானந்தா, ராமகிருஷ்ணா மற்றும் பசறை தேசிய பாடசாலை போன்ற பல பாடசாலைகள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

திறமையான ஆசிரியர்கள், முறையான கற்பித்தல் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை இணைந்து இந்த முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளன.

எனினும், அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் திடீர் ஆசிரியர் இடமாற்றங்கள் இந்த கல்வி வளர்ச்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் பொருளியல் போன்ற பிரதான பாடங்களை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவது மாணவர்களின் கல்வி தொடர்ச்சியை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இப்பாடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கடுமையாகக் குறைந்திருந்த சூழல் நிலவியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அந்தப் பற்றாக்குறை ஓரளவு சரிசெய்யப்பட்டு, பாடசாலைகளில் கற்பித்தல் முறையாக நடைபெற ஆரம்பித்தது. இந்நிலையில் அனுபவமிக்க ஆசிரியர்களை திடீரென மாற்றுவது மீண்டும் பழைய பின்தங்கிய நிலையை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.

மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராகுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இந்த தரணங்களில், மாணவர்களின் முயற்சியும் சமூகத்தின் ஆதரவும் ஒரே நேரத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.” இந்த சந்தர்ப்பத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படுவது கல்வி நெறிமுறைக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், ஒரு ஆசிரியர் மாற்றப்படும் போது உடனடியாக தகுதியான மற்றொருவர் நியமிக்கப்படாதது பாடத்திட்ட முன்னேற்றத்தை முற்றிலும் தடை செய்கிறது.

தற்போது மாவட்டத்தில் 203 தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 35 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் உள்ளன.
இம்மாணவர்களின் எதிர்காலம் கல்வி தரத்துடன் நேரடியாக இணைந்துள்ளது. ஆகையால், கல்வி அதிகாரிகள் முறையான திட்டமிடல் மற்றும் தேவையறிதல் இன்றி ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

கல்வி என்பது ஒரு மாவட்டத்தின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளம். அந்த அடித்தளத்தை பலவீனப்படுத்தும் எந்த முடிவும் எதிர்கால தலைமுறையின் வாய்ப்புகளை சுருக்கும்.

எனவே, பதுளை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்காக ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் மறுபரிசீலனை அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
( இரா. சுரேஷ்குமார் -_தெமோதரை நிருபர் )

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular