Homeஉள்நாடுஅனல் பறக்கும் ஆட்டம்: கொழும்பில் இன்று பலப்பரீட்சை! வெற்றி யாருக்கு?

அனல் பறக்கும் ஆட்டம்: கொழும்பில் இன்று பலப்பரீட்சை! வெற்றி யாருக்கு?

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று (15) இரவு கொழும்பில் நடைபெறுகிறது.

‘ஏ’ பிரிவுக்கான இந்த முக்கிய லீக் ஆட்டம், ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

நடப்பு சாம்பியனான இந்தியா அணி, 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை எதிர்கொள்வதால், இந்தப் போட்டி உலகக் கோப்பையின் முக்கியமான மோதலாகக் கருதப்படுகிறது.

இந்தப் போட்டி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அரசியல் பதற்றங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது. வங்கதேச அணிக்கு ஏற்பட்ட நீக்கத்தை எதிர்த்து, பாகிஸ்தான் அணி முதலில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க முடிவு செய்தது.

ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), மற்றும் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், பாகிஸ்தான் அணி தனது முடிவை வாபஸ் பெற்றது. இதன் பின்னரே இன்றைய மோதல் உறுதியாகியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

ஆனால் இந்திய அணியின் பேட்டிங்கில் இடையிடையே விக்கெட்டுகள் சரிவது கவலை அளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், நமீபியாவுக்கு எதிராக இறுதி கட்டத்தில் 5 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

பிரேமதாசா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, தனது முதல் இரண்டு போட்டிகளிலும் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளை வீழ்த்தி வெற்றி பாதையில் உள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையிலேயே தங்கி விளையாடி வருவது, அந்த அணிக்கு கூடுதல் அனுபவத்தை வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக், ஷதாப் கான், முகமது நவாஸ், அப்ரார் அகமது உள்ளிட்ட பல திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது, இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவாலாக இருக்கும்.

இந்தியா – பாகிஸ்தான் மோதல் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்த வீரர்களுடன் களமிறங்குவதால், இன்றைய போட்டி கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பையில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா முயற்சிக்கும் நிலையில், பாகிஸ்தான் அதிரடி வெற்றியை பதிவு செய்யும் நோக்குடன் களமிறங்குகிறது. இதனால் கொழும்பில் இன்று நடைபெறும் இந்த மோதல், ரசிகர்களுக்கு பரபரப்பான கிரிக்கெட் விருந்தாக அமையும் என்பது உறுதி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular