லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மிக வெற்றிகரமான அணியான ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) புதிய உரிமையாளர்களின் கைக்கு மாறியுள்ளது.
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் (Zaheer Khan) மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட ஸ்டாக்ஹோமைத் தளமாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் இந்த அணியைக் கைப்பற்றியுள்ளது. இதன்படி, இனிவரும் காலங்களில் இந்த அணி “Anchor Jaffna Kings” என அழைக்கப்படவுள்ளது.
கடந்த ஜூலை 23 ஆம் திகதி முன்னாள் உரிமையாளர்களுடனான ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் LPL உரிமையைக் கொண்டுள்ள Innovation Production Group ஆகியவற்றின் கீழ் தற்காலிக நிர்வாகத்தில் இருந்த இந்த அணி, தற்போது மீண்டும் நிலையான உரிமையாளர்களின் கீழ் வந்துள்ளது.
Anchor Sports AB நிறுவனம் ஏற்கனவே பெல்ஜியத்தின் European T20 Premier League தொடரின் Antwerp Anchors அணியையும், கனடாவின் Super60 லீக்கின் Vancouver Anchors ஆண் மற்றும் பெண் அணிகளையும் உரிமையாகக் கொண்டுள்ளதுடன், தற்போது ஜஃப்னா அணியும் அந்த சர்வதேச விளையாட்டு வலைப்பின்னலில் இணையவுள்ளது.
ஜஃப்னா அணியின் முந்தைய உரிமையாளரான Sports Commune நிறுவனத்தின் இணை உரிமையாளரும், முன்னாள் இந்திய 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரருமான மன்ஜோத் கல்ரா (Manjot Kalra) ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உரிமையாளர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
அந்த நிறுவனத்தின் மற்றைய இணை உரிமையாளரான மயங்க் கோயல் இருக்குமிடம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
களத்திற்கு வெளியே பல்வேறு நெருக்கடிகள் இருந்தபோதிலும், LPL வரலாற்றில் மிக வெற்றிகரமான அணியாகத் திகழும் ஜஃப்னா கிங்ஸ், ஐந்து தொடர்களில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், நடப்புத் தொடரிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தை தாம் மதிப்பதாகவும், ஜஃப்னா அணியில் முதலீடு செய்வதன் மூலம் LPL தொடரின் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிக்க எதிர்பார்ப்பதாகவும் நாகேந்திர சித்தௌதம் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து உருவாகும் வேகப்பந்து வீச்சாளர்களின் திறமையை தாம் எப்போதும் பாராட்டுவதாகவும், ஒரு உரிமையாளராக இலங்கை கிரிக்கெட்டுடன் இணைவதில் மகிழ்ச்சியடைவதாகவும் சஹீர் கான் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சஹீர் கான் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவரின் பங்களிப்பு இந்த லீக் தொடருக்கு பெரும் பலமாக இருக்கும் என்றும், அவரது வழிகாட்டல் இலங்கை இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றும் LPL போட்டிப் பணிப்பாளர் சமந்த தொடங்கொட தெரிவித்துள்ளார்.
