Homeஉள்நாடுதோல்விப் பயத்தில் தேர்தல் இழுத்தடிப்பு

தோல்விப் பயத்தில் தேர்தல் இழுத்தடிப்பு

“கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி. அந்த அச்சத்தினாலேயே தேர்தலை நடத்தாமல் அரசு இழுத்தடிப்பு செய்கின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசு குறுகிய காலத்திலேயே மக்களின் நன்மதிப்பை இழந்து வருகின்றது. இதற்கு அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்களே சிறந்த உதாரணம்.

குறிப்பாக, குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்துக் கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் அரசு தோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் இதே நிலைமைதான் நீடிக்கின்றது.

தேர்தலுக்குப் பயமில்லை என்று மேடைகளில் கூறினாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குத் துணிவு இல்லை.” – என்றார்.

அரசின் வாக்குறுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், “புதிய அரசமைப்பை உருவாக்குவதாகக் கர்தினால் ஆண்டகைக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி என்னவானது? அதேபோல், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைத் தாம் ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படுத்துவோம் என்று கூறினார்கள்.

தற்போது இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாவது ஏப்ரல் மாதம் (உயிர்த்த ஞாயிறு நினைவு தினம்) நெருங்குகின்றது. ஆனால், இதுவரை பிரதான சூத்திரதாரி யார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. கர்தினால் ஆண்டகையை இந்த அரசு ஏமாற்றிவிட்டது.” – என்றும் குற்றம் சாட்டினார்.

“நாட்டை முன்னோக்கிச் செல்வதற்கான எந்தவொரு திட்டமும் இந்த அரசிடம் இல்லை. கடந்த ஒரு வருடத்தில் எவ்வித அபிவிருத்தியோ அல்லது மாற்றமோ நிகழவில்லை. மாறாக, நாடாளுமன்றத்திலும் ஏனைய இடங்களிலும் நாடகங்களை அரங்கேற்றுவதிலேயே அரசு குறியாக உள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலும் உயிர்த்த ஞாயிறு விவகாரத்தை வைத்துப் புதிய நாடகத்தை அரங்கேற்றாமல், உண்மையான சூத்திரதாரியைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” – என்றும் நளின் பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular