Homeஉலகம்பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் தெரிவு!

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் தெரிவு!

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்க உள்ளார்.

பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார்.

பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பிஹார் மாநில அமைச்சராக இருந்த நிதின் நபின் (45), கட்சியின் செயல் தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 12-வது தலைவரை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான வேட்புமனு நேற்று பெறப்பட்டது. இப்போதைய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே.லட்சுமணிடம் வழங்கினர். அப்போது மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், புபேந்திர யாதவ், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் நிதின் நபின் சார்பில் மேலும் ஒரு தொகுப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், புஷ்கர் சிங் தாமி, நயாப் சிங் சைனி, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதுபோல, பிஹார், ஆந்திரா, மகாராஷ்டிரா, அசாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட இதர மாநில பாஜக தலைவர்களும் நிதின் நபின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மனு தாக்கல் முடிந்ததை அடுத்து, கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி லட்சுமண் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. இதில் 50 சதவீத மாநில தேர்தல் முடிந்ததும் தேசியத் தலைவர் தேர்தலை நடத்தலாம் என்பது கட்சி விதி. அதன்படி, 30 மாநில தலைவர் தேர்தல் முடிந்த நிலையில், தேசிய தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கின.

கடந்த ஜனவரி 16-ம் தேதி இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. 19-ம் தேதி (நேற்று) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில், இப்போதைய செயல் தலைவர் நிதின் நபின் சார்பில் மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் உரிய படிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள, செல்லத்தக்க மனுக்கள் என்று பரிசீலனையில் கண்டறியப்பட்டது.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பாஜக அமைப்புத் தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப் பட்டுள்ளது. எனவே, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படுகிறார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

பாஜகவைப் போலவே நிதினுக்கும் 45 வயது. கட்சியின் தேசியத் தலைவர் பதவியை இளம் வயதில் எட்டிப் பிடித்த முதல் தலை​வர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சித் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular