Homeஉலகம்சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்

சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்

சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா.

இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த சொகுசு விடுதிகளுக்கு பெயர் போனது. இங்கு உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மதுபான விருந்து, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. அப்போது திடீரென சொகுசு விடுதியின் மதுபான பாரில் தீ பற்றியது. இந்த தீ சில நிமிடங்களில் விடுதி முழுதும் பரவியது. மக்கள் பலர் அலறியடித்து வெளியேறினர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுவிட்சர்லாந்து சுகாதார துறை தெரிவித்தது.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ பற்றிய போது அடுத்தடுத்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால், முதலில் இது பயங்கரவாத தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டது. பொலிஸார் விசாரணையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது உறுதியானது.

Flashover எனப்படும் வெடித்துச் சிதறுதல் காரணமாக, முழு அறையுமே தீப்பிடித்து இருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகப்படுகின்றனர். அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தையும் மீட்கப்பட்ட ஆதாரங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், விரைவில் விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular