இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (16) காலை பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கிலோமீற்றர் தொலைவில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசியாவின் புவி இயற்பியல் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சொத்துச் சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் மக்கள் சில நிமிடங்கள் பதற்றமடைந்த போதிலும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அவசர நிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
